Friday, December 7, 2012

அமைதியையும் நிசப்ததையுமே அனுபவித்து வந்த என் மனதை இன்று
அதன் ஊடே கலந்து வரும் சப்தங்களையும்
முதலில் மனதார ஏற்றுப்
பின் நுகரவும் மகிழவும் துவங்குகிறேன் .
காலையின் ஈரக் குளிர் ;
சூடில்லாத சூரிய ஒளி .
அமைதியைக் கீறி நாலா மூலைகளிலிருந்தும்
அணில் நண்பர்களின் சந்தோஷப் பரிமாற்றங்கள்
'சிடு சிடு சிடு ' தந்தி சங்கேதங்களில் --
வடக்குத் தொடுவானில் சோகமாக ஒரு தொழிற்கூடச் சங்கு விம்மித் தாழ்கிறது ;
நான் நடைப்பயிற்சியில் உயிர்க்கும் பெருமூச்சுகள் கூட
காற்றில் சிறு நுண்ணிய அலை ஓசை எழுப்புகிறது .
தென் மூலையிலிருந்து திடீரென விமானம் ஒன்றின் பின்தங்கிய குடையும் ஒலி -
' கியோன்க் கியோன்க் ' எனும் மஞ்சள் விளிம்பு விழி மைனாக்களின் காதல் அழைப்பு !
யாரோ பக்கத்து தொகுப்பு வீட்டில் பக்தி மேலிட வழிபடும் ' கிண்கிணி கிண்கிணி ' சிறு மணியோசை ;
வானின் குறுக்காய் 'பட பட பட ' புறாச் சிறகு இயக்கம் .
நகரத்தின் 'ஆட்டோ 'வின் கடுமையான கண்விழிப்பு ;
என் நிழலின் நகர்வின் வேகம் எழுப்பும் 'மைக்ரோ ' ஓசை -
ஆம் , எல்லாவற்றையுமே கலந்து அனுபவிக்கக் கற்றுக் கொள்கிறேன் .
எனக்குள் நானே என் போதி ஞானம் விழிப்பு கண்டு மெல்லிய புன்னகை தரிக்கிறேன்.
--சந்திர கலாதர்
08.12.2012. / சனி / கார்த்திகை 23 /நந்தன
காலை மணி 8
--
S.CHANDRA KALAADHAR

No comments:

Post a Comment