பொன் மாலை உருக்கும் கருங்குயிலே !
&
தைத்ததுவோ பருவ நெஞ்சுள் கூர்முனைக் காதல் முள் ?
ஆங்குக் கசிந்து வடிந்ததுவோ ஆசைக்குருதியும் செங்குளமாய் ?
வதைக்கும் வலி அலைகளாய் எழுந்தவோ நினைவுக் கற்றைகள் ?
சோக கீத நதிகளானவோ ஏக்க ஊற்றுகள் ?
மயங்கும் மாலையில் சோலையும் விம்மிட
இதய யாழினில் சோக ராகங்கள் ஓயாது மீட்டிடும்
கானக் கருங்குயிலே ! சொல்லாயோ விடை இதற்கு ?
இலைச்செறிவிடைஇராக வழி ஊர்ந்து
விழிநோகக் காத்திருக்கிறேன் ;
தாபங்கள் கூறாயோ ?
கூவோ...கூவோ ..கூவோ என உயர்கிளையில் மெல்லத் துவங்கிய நீ
குவ்வ்வோ ..குவ்வ்வோ...குவ்வ்வ்வோ என உச்சக் கூர்குரலில்
இதயமே இடிபடக் கூவி அழைப்பதுவும் எவரையம்மா ?
இரங்கியே அழைத்தும் இறங்காது செல்பவன்
எக்கயவன் அம்மா ? எக் கல்நெஞ்சன் அவன் ?
அலை அலையாய்ப்பெருகி வரும் கீதக் கடலினிலே மூழ்கிடினும்
ஏக்கத்தின் ஆழமதைக் கண்டிலனே !
சிற்றலகு விரித்துப் பெரும் சோகக் குரல் கூட்டி
இச்சோலை வனம் கலக்குகின்றாய் ;
பொன் மாலையினை உருக்குகின்றாய் !
ஆறுதல் கூறிடவோ காதல் தேவி வெள்ளி
மேற்திசை வான் வாயிலிலே முகம் காட்டி அன்பாய் முளைத்தனளோ ?
தொற்றிடுமோஉன் சோகம் என்றஞ்சும் கீழ்த்திசையாள்
இரவுமகன் வரவு கண்டு பேராசையுடன் அணைக்கின்றாள் ;
எங்கோடிப் போவானோ என்று எழும் பேரச்சத்தால் !
என் நெஞ்சினிலும் நொடியில் இதோ பிரிவுக்கனல் மூட்டி விட்டாய் !
கீதநெய் வார்த்து ஓங்கி அதை வானுயர வளர விட்டாய் !
காதலிலே நெகிழ்ந்து துயர் கானத்திலே கரையும் பேடைக் கருங்குயிலே
ஆறுதல் யாது சொல்வேன் ?.
...............சந்திர கலாதர்
No comments:
Post a Comment