Friday, April 29, 2011

A BIRD IS ABOUT TO TAKE FLIGHT !

நுழைவாயில் தோரணங்கள்
@

இதோ ஒரு பறவை
நீல வானில்
வெண்மேகங்கள் இடையே
பறக்கத் துவங்கிவிட்டது

@

இதுகாறும்
ஆண்டுகள் பலப்பலவாக
அடர்ந்த நெஞ்சக் கானகத்தின்
சிந்தனை உச்சாணிக் கொம்புகளில்
கவிதைச் சிறகை நீவியபடி
தனிமை இனிமை வெதுவெதுப்பில்
தொடுவானத்து மனோகரங்களை..
பக்கத்துப் பசுமைப் பரவசங்களை
அணுஅணுவாய் ரசித்துக்
கற்பனைக் கதிர்களை அறுவடை செய்து
காலத்துளிகளின் ஆரவாரமற்ற ஒழுகலைக்
கண்மூடி வியந்து --

@

தன் தோல்விகளில் துவண்டு
ஏக்கங்களில் நலிந்து
துயரங்களில் அழுது கரைந்து
நம்பிக்கைகளில் நடந்து
மனம் கொடியாய் வளைந்து ஆடி
மணி வடங்களில்
நொடிக் குதிரைகளைப் பூட்டி
நிமிடச் சாட்டைகளால் சுண்டி
வருடத் தேரினை உருட்டி இருக்கின்றது !

@

உள்ளதை உணர்ந்தவாறு
சொல் பிரவாகங்களை
இலக்கண இடுக்குகளில் துன்புறுத்தாது
உணர்வு ஒளியிடை
சுதந்திரமாய் மினுக்கச் செய்து
பாடத் துவங்கி விட்டது--

@

நெஞ்சிற்கும் நாவிற்கும் இடையில்
ஸ்ருதி பேதங்கள் இல்லை;
பொய்யான வேடங்கள் இல்லை ;
போதனை வேதனை இல்லை.

@

இயற்கை இதன் இதயம்;
காதல் இதன் மூச்சு ;
நீண்ட கவிதை இறக்கைகளை
இனிமையாய் விரித்து
உயர உயர
வட்டமடிக்கத் துவங்கி விட்டது ;

@

எத்தனையோ வேடுவப் பார்வைகள்
விற்களை வளைக்கப் போவது
இதற்குப் புரியாமல் இல்லை ;
எல்லாப் பறவைகளும்
ஒரே குரலில் ஒரே ராகத்தில்
ஒரே கீதத்தையே பாடினால்...?

@

பிரபஞ்ச வீதிகளில் அலைவதால்
இதன் இறக்கைகள் நக்ஷத்திர மகரந்தங்களை
மென்சாரலாக உதிர்க்கக் கூடும் --

@

ஒ !
இப்பறவை பாடுவது எல்லாம்
கால இடைவெளிகள் கடந்து
இணை இதய நரம்புகளில்
என்றோ எங்கோ தோன்றிடப் போகும்
இனிய அதிர்வுகளுக்காகவே !
எதிர் நீச்சல் அடித்து
அன்று அதைச் சேரத் துடிக்கும்
அந்த மனப் பறவைக்காகவே !

@

ஒ மனப்பறவையே !
காத்திருக்கிறேன் !
ஆம்--
பிரபஞ்ச வனத்தினிலே
மேகச் செடிகளிலே
சந்திர விளக்கொளியில்
நக்ஷத்திரப் பூப்பறித்து
மாலை தொடுத்தபடி
காலக் கடல் ஓரமாய்
யுகக் கரை மீதினில்
சூரியன் உன் வருகைக்காக --
நான் காத்திருக்கிறேன் !
வருக !வருகவே !

--சந்திர கலாதர்

[ என் முதல் கவிதை எண்ணத் தொகுப்பின் முன்னுரையாய் என்னுரையாய் 'நெஞ்சில் நடந்த சுந்தர நதிகள்'' நூலில் வெளியானது ]

No comments:

Post a Comment