Sunday, April 24, 2011

YOU SHALL COME ! EXTEND YOUR HAND !

நீ வருவாய் ! கை தருவாய் !
@@@

ஆற்றின் பெருவெள்ளம் அகன்ற கரைகளை

அறுத்துச் செல்கிறது --

புரண்டு மோதி , நுரைத்துச் சுழித்து

ஆவேசமாய்ச் சிவந்து

புது வெள்ளம் பாய்கிறது --

எங்கும் " ஹோ " ங்காரம் !

மழை தன்னைத் தானே

சாட்டையால் விளாறிக்கொண்டு

கத்திக் கதறுகிறது--

'பளப்பள ' மின்னல்கள் மேகங்களைக்

குத்திக் கிழிக்கின்றன --

பேரிடிகள் அண்டங்களைக் குட்டுகின்றன;

நொறுங்கல்கள் எங்கோ சரிகின்றன--

காற்று முடியைப் பிய்த்துக்கொண்டு

ஊளை இடுகின்றது --

ஐம்பூத ஆவேசக் கூத்தா இது ?

@

அந்த நள்ளிரவின் மைப்பூச்சில்

ஆற்றங்கரை ஓரம்

கந்தைத் துணி தலை சுற்றி

தடித்த மழைத் திரைவழி

கொடிமின்னல் ஒளியின்

நொடி விசிறல்களில்

பார்வைத் தூண்டிலிட்டு

உனக்காக....

எனக்கான சிறு படகை எதிர்நோக்கி

வெடவெடத்துக் காத்திருக்கிறேன்--

@

அண்டங்கள் கோடி நீ

தாண்டி இருந்தாலும்

என் தவிப்பு எப்படியும்

உனைப் பற்றி இழுத்து விடும்..

இசையாய்த் துடுப்பு

எனை நோக்கி வரும்--

@

என் நம்பிக்கை

சத்தியம் ! சத்தியம்!

நீ வருவாய்

கை தருவாய்

வழி அழைப்பாய் !


--சந்திர கலாதர்

No comments:

Post a Comment