Friday, April 15, 2011

MILLIONS OF SPROUTING AND DYING THOUGHTS !

எத்தனை கோடி எண்ணங்கள் !

எத்தனை கோடி எண்ணங்கள் -அங்கே
எத்தனை எத்தனை வண்ணங்கள் !

இந்தோ தோன்றுது எங்கோ மறையுது --அந்தோ
இதற்கென் செய்வதடா?

வானில் எத்தனை கோடி விண்மீன்களடி?
கானில் எத்தனை கோடிச் செடிகளடி?
காற்றில் எத்தனை நுண் தூசிகளடி?
ஊற்றில் எத்தனை உல்லாசத் துளிகளடி?

அலைகடல் அலைகளைக் கணக்கிட முடிந்தால்.-
ஆதவன் வயதை அறிந்திட முடிந்தால்--
இறைவன் இது எனக் காட்டிட முடிந்தால்--
எண்ணங்கள் எண்ணிக்கை தவறாது சொல்வேன்! .

மின்னலை மிஞ்சி விரைந்தோடும் ஈட்டி எண்ணங்கள்
காற்றிற் தவழ்ந்து குழைந்திடும் மென்மழலை எண்ணங்கள்
அலையிற் துரும்பென ஆடியாடி அலைந்திடும் எண்ணங்கள்
மலையிற் குளிர்பனிச் சாரல் என்றே குவிந்திடும் எண்ணங்கள் !

மின்னற் கீற்றென நொடி இன்பம் ஈந்து
இறந்திடும் எண்ணமடி!
இறந்த இடம்தனில் மறுபடி முளைத்திடும்
கொடிய எண்ணமடி-

மாலை வானில் மிளிரும் வண்ண
மாய எண்ணமடி!
அம்மாலை தொடரும் காரிருள் எனவே
நீள் கரிய எண்ணமடி!

எத்தனை தோற்றங்கள் எத்தனை மாற்றங்கள்
எடுத்து இயம்ப முடியாதடி!
தோன்றி மடிந்தது இனியென்று வருமென்று
கூறிட முடியாதடி!

இனிய எண்ணங்கள் என்றும் உறைவீர்
என்றிட முடியாதடி!
கொடிய எண்ணங்கள் ஒழிகென என்றும்
கொன்றிட முடியாதடி!

இம்மண்ணில் புதைந்த உயிரினம் அனைத்தும்
எண்ணிடத் தொலையுமோ?
இம்மனதில் புதைந்த எண்ணங்கள் அதுபோல்
எண்ணிடக் கூடுமோ?

புதைந்திட்ட மண்ணில் பூத்திட்ட மலர்கள்
எண்ணிடத் தொலையுமோ?
புதைந்திட்ட மனதில் மலர்ந்திட்ட எண்ணங்கள்
எண்ணிடக் கூடுமோ?

புதைதலும் பூத்தலும் நடைபெறும் புவியோ
என்றும் ஒன்றன்றோ!
சிதைதலும் துளிர்த்தலும் நிகழ்ந்திடும் மனம்மட்டும்
மாறுவதேன் கண்ணே?

உலகினில் உறைபவர் தம்எண்ணம் அனைத்தையும்
ஒளிவின்றிக் கூறிடில்
உலகில் உத்தமன் இவன் என உரைசொல
எவர் உளர் சொல் கண்ணே?

------சந்திர கலாதர்

No comments:

Post a Comment