Tuesday, July 2, 2013

while a creation is on..

there should be no struggle while a poem is born in you...it must absolutely be a painless delivery ..no crying in pain for words and thoughts ..it must be a blessing of nature and should not be a dog-fight within yourselves and bruises everywhere !
---sundaram chandrakalaadhar

Saturday, December 8, 2012


பொன் மாலை உருக்கும் கருங்குயிலே !

&

தைத்ததுவோ பருவ நெஞ்சுள் கூர்முனைக் காதல் முள் ?

ஆங்குக் கசிந்து வடிந்ததுவோ ஆசைக்குருதியும் செங்குளமாய் ?

வதைக்கும் வலி அலைகளாய் எழுந்தவோ நினைவுக் கற்றைகள் ?

சோக கீத நதிகளானவோ ஏக்க ஊற்றுகள் ?

மயங்கும் மாலையில் சோலையும் விம்மிட

இதய யாழினில் சோக ராகங்கள் ஓயாது மீட்டிடும்

கானக் கருங்குயிலே ! சொல்லாயோ விடை இதற்கு ?

இலைச்செறிவிடைஇராக வழி ஊர்ந்து

விழிநோகக் காத்திருக்கிறேன் ;

தாபங்கள் கூறாயோ ?


கூவோ...கூவோ ..கூவோ என உயர்கிளையில் மெல்லத் துவங்கிய நீ

குவ்வ்வோ ..குவ்வ்வோ...குவ்வ்வ்வோ என உச்சக் கூர்குரலில்

இதயமே இடிபடக் கூவி அழைப்பதுவும் எவரையம்மா ?

இரங்கியே அழைத்தும் இறங்காது செல்பவன்

எக்கயவன் அம்மா ? எக் கல்நெஞ்சன் அவன் ?

அலை அலையாய்ப்பெருகி வரும் கீதக் கடலினிலே மூழ்கிடினும்

ஏக்கத்தின் ஆழமதைக் கண்டிலனே !


சிற்றலகு விரித்துப் பெரும் சோகக் குரல் கூட்டி

இச்சோலை வனம் கலக்குகின்றாய் ;

பொன் மாலையினை உருக்குகின்றாய் !

ஆறுதல் கூறிடவோ காதல் தேவி வெள்ளி

மேற்திசை வான் வாயிலிலே முகம் காட்டி அன்பாய் முளைத்தனளோ ?

தொற்றிடுமோஉன் சோகம் என்றஞ்சும் கீழ்த்திசையாள்

இரவுமகன் வரவு கண்டு பேராசையுடன் அணைக்கின்றாள் ;

எங்கோடிப் போவானோ என்று எழும் பேரச்சத்தால் !

என் நெஞ்சினிலும் நொடியில் இதோ பிரிவுக்கனல் மூட்டி விட்டாய் !

கீதநெய் வார்த்து ஓங்கி அதை வானுயர வளர விட்டாய் !

காதலிலே நெகிழ்ந்து துயர் கானத்திலே கரையும் பேடைக் கருங்குயிலே

ஆறுதல் யாது சொல்வேன் ?.




...............சந்திர கலாதர்

Friday, December 7, 2012

அமைதியையும் நிசப்ததையுமே அனுபவித்து வந்த என் மனதை இன்று
அதன் ஊடே கலந்து வரும் சப்தங்களையும்
முதலில் மனதார ஏற்றுப்
பின் நுகரவும் மகிழவும் துவங்குகிறேன் .
காலையின் ஈரக் குளிர் ;
சூடில்லாத சூரிய ஒளி .
அமைதியைக் கீறி நாலா மூலைகளிலிருந்தும்
அணில் நண்பர்களின் சந்தோஷப் பரிமாற்றங்கள்
'சிடு சிடு சிடு ' தந்தி சங்கேதங்களில் --
வடக்குத் தொடுவானில் சோகமாக ஒரு தொழிற்கூடச் சங்கு விம்மித் தாழ்கிறது ;
நான் நடைப்பயிற்சியில் உயிர்க்கும் பெருமூச்சுகள் கூட
காற்றில் சிறு நுண்ணிய அலை ஓசை எழுப்புகிறது .
தென் மூலையிலிருந்து திடீரென விமானம் ஒன்றின் பின்தங்கிய குடையும் ஒலி -
' கியோன்க் கியோன்க் ' எனும் மஞ்சள் விளிம்பு விழி மைனாக்களின் காதல் அழைப்பு !
யாரோ பக்கத்து தொகுப்பு வீட்டில் பக்தி மேலிட வழிபடும் ' கிண்கிணி கிண்கிணி ' சிறு மணியோசை ;
வானின் குறுக்காய் 'பட பட பட ' புறாச் சிறகு இயக்கம் .
நகரத்தின் 'ஆட்டோ 'வின் கடுமையான கண்விழிப்பு ;
என் நிழலின் நகர்வின் வேகம் எழுப்பும் 'மைக்ரோ ' ஓசை -
ஆம் , எல்லாவற்றையுமே கலந்து அனுபவிக்கக் கற்றுக் கொள்கிறேன் .
எனக்குள் நானே என் போதி ஞானம் விழிப்பு கண்டு மெல்லிய புன்னகை தரிக்கிறேன்.
--சந்திர கலாதர்
08.12.2012. / சனி / கார்த்திகை 23 /நந்தன
காலை மணி 8
--
S.CHANDRA KALAADHAR

Thursday, December 6, 2012

பெண்களைப் பார்த்து
அழகிய பொய் சொல்லுங்கள் !
சத்தியம் உங்களைத் தண்டித்து விடாது -
பெண்ணும் கூடக் கொஞ்சம் நம்புவாள்
கண்ணாடி முன் நின்று
தலை சாய்த்துச் சரி பார்ப்பாள் !
'பெண் '-' பொய் ' ஒற்றுமை பாருங்கள்
ஈரெழுத்தாய் மெய்யும் ஒற்றுமாய்
எத்தனை பொருத்தம் !
சத்தியம் கேட்டால்
சொல்லிக் கொள்வோம்
'இந்நொடி எனக்கிவள்
ஆசைப் பிழம்பில்
வான் தேவதையே ! '--
அதன் தலையில் அடித்தே
சத்தியம் செய்வோம் !
பொய்யைக் கலந்துதான்
பெண்ணைப் படைத்தான்
---சந்திர கலாதர்
06.12.2012 /வியாழன் / கார்த்திகை 21
பிற்பகல் 2 மணி
--

Wednesday, May 23, 2012

this evening ,it seems , that the sun is very unwilling to commence its fast descent and stays put in the slopes of the western sky,probably charmed by the fanning of the very brisk winds and the inimitable cajoling 'ccoooo's of the cuckoo birds
o cuckoo bird , who has inserted so snugly a so powerful flute inside your throat that you stir the whole evening calmness into a mood of a longing love ?
why the doves never opt a perch on trees but ever prefer the housetops only ?
the crows ,unbearable of the peak summer heat ,select window doors and water and sewerage pipelines for their perch and spoil the places with their pasty droppings.
---s.chandra kalaadhar /22.05.2012 /tuesday

Sunday, April 8, 2012

ஒரு பெரும் கவலை பாறாங்கல்லாய் என் தலையை வாரத்தில் பலமுறை அழுத்தி விடுகிறது.
எனக்குப் பிடித்த முயற்சிகளே கூட என் சோர்வில் , துயரில் வெறுப்பாகிவிடுகின்றன ;
எனக்குள் நான் கத்திக் கூப்பாடு போடுகிறேன் ;வேறு வழியே தோன்றுவதில்லை -
மீள்வதற்கு வழியே இல்லை என வாடிப் போகையில் ,அந்தத் துயர் எதற்கோ எப்படியோ
இறங்கிவிடுகையில் ,இது நிலைக்குமா ? இது உண்மையா ? என்ற ஐயத்தில் நான் தடுமாறுகையில்
துளிர்க்கும் சின்னஞ் சிறு சந்தோஷம் இருக்கிறதே ..அப்போது எல்லா வலிகளும் போய் ,எல்லா வழிகளும் திறந்து , எல்லாக் கலைகளும் எனைச் சூழ்ந்து ,என் மனம் நுனிக் கால்விரல்களில் ஆடும்' ' பாலே ' நடனம் இருக்கிறதே ..! ஓர் நெம்புகோலால் உலகையே நெம்பிவிடுவது போல் ,ஒரு சிறு மகிழ்வு ரேகை என் கவலை மலையையே புரட்டிப் போட்டுவிடும் அற்புதம் என்னென்பேன் !
-------சந்திர கலாதர்

Friday, March 23, 2012

how many deviations a life's journey takes on on its onward march!
attracted to all and sundry sweet things, like bees, on its way-
a hop here ,a bite there,a suck elsewhere,and a flight to something else;
quite puzzled to select its haunt ,it reels in pain of defeat and non-achievement ;
the dabbling continues unabated till the day dawns of its sudden enlightenment --
when ,realising its potential in a specific field ,decides to desert the others ,
of course with a heavy heart ,hardening its resolve to pursue in only one field !
it surprises life why so much haggling so long on a simple problem !
now this road is lit with surprises of successes gladdening the life!
that is how i landed on poetry from painting and other diverting passions
 
-sundaram chandrakalaadhar.

Sunday, March 4, 2012

அடிக்கடி சோர்கிறேன் 
 
மனதால் உடலால் --
 
அந்த அழைப்போ ?
 
அருகிலா?தொலைவிலா?
 
வயோதிக  விசும்பல்
 
'முன்போல் இல்லை ' -
 
மனதின் வாசகம் 
 
முள்போல் நெருடல்  -
 
ஓ..எத்தனை வேலை 
 
என்முன் தேக்கமாய் !
 
எண்ணச் சுமையில்
 
அமிழ்ந்தே தொலைகிறேன்-
 
என் மக்களுக்கான 
 
எனது கடமைகள் 
 
அதிலும் பாக்கி -
 
எழுதும் வேட்கையில் 
 
கூனிக் கிடக்கிறேன் -
 
படிக்கும் ஆசையில் 
 
படுத்துக் கிடக்கிறேன் 
 
தூங்கியும் தொலைகிறேன் --
 
என்றோ படித்தது 
 
நினைவில் எழுகுது -
 
'நன்றாக இருக்கிறேன் '
 
ஆழ்மூச்சு கொள்கிறேன் 
 
விண்ணை நோக்கி 
 
' என்னுள் சக்தி  நிரப்பு '
 
ஆணையிடுகிறேன் --
 
சில நொடிகளில் 
 
மாறிப் போகிறேன்--
 
என்னுள் எல்லாம் 
 
சக்தியின் வெள்ளம் -
 
சோர்வு ஒழிந்திடத்
 
துள்ளி எழுகிறேன் -
 
எனக்குள் எங்கும் 
 
இன்னிசைப்  பொழிவே !
 
 
 
---சந்திர கலாதர்       

--

Monday, February 20, 2012

உதிக்கையில்
விழிகளால் மட்டும் அழைப்பு -
எழுகையில்
எண்ணிலாக் கரங்களில் அணைப்பு -
உயர்கையில்
வெம்மை அன்பின் பேச்சு -
உச்சியில்
நண்பனாய் எங்கும் கிள்ளு --
மாலையில்  
ஏக்கமாய் ஓர் பார்வை -
அந்தியில்
பொன்முத்தங்களில் விடைபெறுகை -
பிரிகையில் 
எனக்கோர் இருட்போர்வை -
தினம்  இது நடந்தாலும்
கதிரோனே !
என்றும் இதில் அலுப்பில்லை !
 
---சந்திர  கலாதர்    

Saturday, June 11, 2011

When That Meet Would Materialize ?

என்று நிகழும் அந்த சந்திப்பு ?

அவன் ஒரு கவிஞன் ..
உலகினைப் பற்றி அவன் அறியான் ,,
அவனையும் உலகம் அறியாது ..
நியாயமற்ற செயல்களைக் கண்டு அவன் காட்டுத் தீயாய்க் கனல்கிறான் .
இளமையான அவன் உள்ளத்தில் உயரிய கொள்கைகள்
பனியெனப் படர்ந்து அலங்கரிக்கின்றன ..
இயற்கையின் அற்புதப் படைப்புகளைக் கண்டதும்
அவன் தென்றலாய்க் கீதம் இசைத்து நடமிட்டு அலைகிறான்..
அலை மோதும் கலை உள்ளம் படைத்தவன் ,
தன் உள்ளத்தின் மறு உருவம் எங்காவது கண்டு இணைந்திட அலைகிறான்..
அழகினுக்கு அழகு செய்யும் அவன் கவி உள்ளம்
தன் கற்பனையில் மிளிர்ந்து நடை பயில்கின்ற
அவ்வடிவத்தை வழி எல்லாம் தேடுகையில் ...
காணும் உருவங்களில் எல்லாம்
ஓரிரு குறைகளைக் கண்டு தொய்கிறது ஒப்புநோக்கி மனம் --
ஏமாந்து ஏமாந்து தவித்துப் பயணம் தொடர்கிறது ..
என்று நிகழும் அந்த இணை இதயத்தின் சந்திப்பு ?

-----------சந்திர கலாதர்

Friday, June 10, 2011

THE DREAM GIRL I YEARN FOR ! [ PART--2 ]

கனவுக்கன்னி நலம் சொன்னேன் [ பகுதி- --2 ]

என் உள்ளத்து எழுச்சி எல்லாம் கற்பனைக் காட்சி எல்லாம்
தான் கேட்டுத் தெரிந்துகொண்டு என் உள்ளம் மகிழ்ந்திடவும்
என் குற்றம் களைந்திடவும் என் பண்பு உயர்ந்திடவும்
என் தாகம் தணிந்திடவும் ஓரிரு நல் வார்த்தைகளை
இதமாகக் குறும்பாக மெதுவாக அழகாக
மொழியும் அவள் நீ காணின்
வசந்த வீதியிலே வருந்தாது அழைத்து வாராய் !

&&&&&&&&&

புவியெங்கும் கோலமிட்டு ஆதவனை வரவேற்க
உஷை என்னும் தேவ நங்கை வண்ணம் தீட்டி வருகையிலே ---
தவறாது தான் எழுந்து வீட்டின் இருபுறமும்
சாணமிட்ட நீர் தெளித்து தாமரைகள் பல மலர்ந்து
தலை அசைத்துச் சிரித்தாற்போல் --
அழகழகாய் விதவிதமாய் ஒளிமயமாய்க் கோலமிட்டு
என் நெஞ்சைப் பெருமிதத்தால் பூரிக்கச் செய்திடுவாள் --

அந்நங்கை நீ காணின் பொற் கதிரால் அணி செய்து
மங்கலமாய் மனை சேர்ப்பாய் !

&&&&&&&&&&

கடுகடு முகத்தினராய் முணு முணு இதழினராய்
நறநறப் பற்களோடும் தீ உமிழ் பார்வையோடும்
புகை கக்கும் நாசியராய் வஞ்சகப் பார்வையராய்ப்
புறம் கேட்கும் செவிகளொடும் பொறாமை நிறை விழிகளோடும்
கொடும் வஞ்சக நெஞ்சினராய்ச்
சூதினிலே மந்தரையாய் வாதினிலே சமர்த்தர்களாய்
அடி வயிற்றில் தீ வளர்த்து அணையாமற் காப்பவராய்
அலைகின்ற நங்கையரை அறவே நீ ஒதுக்கி விடு !
துணையாக அவர்சேர பிறப்பே வீண் அன்றோ ?

எனவே தான் கதிரோனே ! அடையாளம் நீ அறிந்து
அந்நங்கை அழைத்து வாராய் மேகப் பூச் சரம் சூட்டி !


----------சந்திர கலாதர்

THE DREAM GIRL I YEARN FOR..! [ PART--1 ]

கனவுக்கன்னி நலம் சொன்னேன் ! [ பகுதி -- 1 ]

கற்பனையில் உதித்திட்டாள் கனவுகளிற் திரிகின்றாள்
குணநலன்கள் கூறிடுவேன் கூர்மையாய்ச் செவிமடுப்பாய்
மலர்தூவி அழைத்து வந்து மருந்தாகக் கரம் சேர்ப்பாய்
உலகெல்லாம் அலைபவனே! சூரியனே வேண்டுகிறேன் !

கனவின் கன்னியவள் இன்மொழியாம் நல்லமுதை
அமைதியாய் மிக நளினமுடன் விழியாலும் கனி இதழாலும்
வாரிவாரி எப்பொழுதும் குழைந்திடும் தாய் மொழியில்
என்னிரு செவிகளிலே மென்மையாய் வார்த்திடுவாள்
உள்ளத்தைத் தன்னுரையால் மகிழ்வினிற் தோய்த்திடுவாள்--

அதிகாலையிற் தான் எழுந்து குளிர் நீரிற் குளித்துவிட்டு
தூய மஞ்சள் முகம் மிளிர்ந்து மங்கலத்தை மகிழ்ந்துரைக்க
துவைத்துலர்ந்த புடவைதனைப் பொலிவுடனே அணிந்துகொண்டு
அழகு ஒளிர் நுதலகத்தில் குங்குமத்தால் திலகமிட்டு
சிறுகீற்றாய்த் திருநீற்றைச் சிறு முகிலாய்த் தீட்டிவிட்டு
தளிர் விரலாற் தீபம் ஏற்றி வாய்நிறையத் துதிபாடி
விழிகள்வழி வழிந்துருகும் பக்தி ஊற்றில் எனை நீராட்டி--

உள்ளீரம் உலர்ந்திடாத பளபளக்கும் கூந்தலினைச்
சிறு முடியிட்டு முதுகிற் தாங்கி
கூந்தற் பொடி மணமணக்கும் சோர்குழலிற் சரம்சூடி
நந்தி போலும் நிலம் சேர்ந்து தெய்வச் சிலை தனை வணங்கி
விழிகள் மூடி நலம் நாடும் அழகு நங்கை அவள் கண்டால்--

என் இதயக் கோவிலிலே நடமாடும் தேவியாகிடவே
தென்றல் போர்த்தி அழைத்து வாராய் !

காலையிலே மனை கூட்டி முகத்திற்குப் பொலிவூட்டிப்
புத்தாடை புனைந்திடுவாள் ; நான் விரும்பும் கீதங்களை
அவள் விரும்பும் பாடல்களை உளம் நெகிழப் பாடிடுவாள்--

உள்ளத்துத் தாபங்களைப் பலர் அறியக் கதறிடாது
ஊர் சிரிக்கப் பேசிடாது உள் வீட்டுச் சண்டைகளைக்
கொல்லையிலே முழக்கிடாது மெதுவாக எனை நெருங்கி
விழியருவி எனை நனைத்து மௌனத்தில் எனை உருக்கி
மெல்லவே இன்குரலில் என் நெஞ்சம் தைக்குமாறு
ஒன்று ஒன்றாய்ப் பிழை காட்டிப் பலவாறாய் அவை தன்னை
வாட்டிடும் வகை கூறி அன்பினில் எனைத் திருத்தி--

பண்பிலே வழி நடத்தும் அந்நங்கை நீ காணின்
வானவில் மாலையிட்டு மனம் மகிழச் சேர்த்திடுவாய் !

----சந்திர கலாதர்

O..HOW I AWAIT HER !

உன்னத இதயமே ..வாராயோ !

எத்தனை எத்தனை அச்சுறுத்தும் ரகசியங்கள் !
ஒளி உமிழ் கற்பனைகள் !
எண்ண மண மலர்கள் !
கண்ணீர் மல்கும் சோக நினைவுகள் !

ஓ !
ஆழப் புதையுண்ட என் மனதின்
அச்சுறுத்தும் அறைகளின்
கரிய மூலை முடுக்குகளில்
மறைத்தும் புதைத்தும் வைக்கப்பட்டுள்ளன --

ஓ ! நினைவுகளே !
நீங்கள் ஏன் மக்கிப் போவதில்லை ?

உயர்த்திய தன் கரத்தில்
அலைபடாது எரியும்
ஓர் கருணைத் தீபம் ஏந்தி --

உயிர் மூச்சே மென் தென்றலாய்
இதயத்தை இதமாய்த் தடவி --

உண்மை அன்பின் வெம்மையில்
என் சந்தேகங்களைக் கரைத்து
ரகசியங்களை வாரி இறைத்திடா
உத்தம நெஞ்சோடு --

நள்ளிரவு வேளைதனில்
பைத்தியமாய் மனம்
பரபரக்கும் வேளையில் --

உள்ளங்கையோடு
தேற்றிடும் தன் கை பிணைத்து --

என் மன இருட் குகைகளைப்
பொறுமையாய் ஆராய விழையும் --

ஓ !
அந்த உன்னத இதயத்திற்காக
எப்படி ஏங்கித் துடிக்கிறேன் !

-----சந்திர கலாதர்

THIS IS TO KILL YOUR LAZINESS !

இலக்கிய ஊஞ்சலில் [ ஒரு கை எழுத்து இதழில் ] நவம்பர் 1991 இல் என் எழுத்து---

உங்களை நான் அறிவேன்--மிக நன்றாகவே அறிவேன் !
உங்களைவிட உங்களை நான் நான்கு அறிவேன் என்று சொன்னால் நம்பவா போகிறீர்கள் ?
எனக்குத் தெரியும் நீங்கள் எல்லாம் மகாரசிகர்கள் !
பூக்களை அப்படி ரசிப்பீர்கள் !
ஆனால்..
நந்தவனத்தை நடந்து வரச் சொல்வீர்கள் !

பூமாலைகளில் நசுங்கும் மலர்களுக்காகக் கண்ணீர் ஆவீர்கள் !
ஆனால்--
மனைவிக்கு மட்டும் மலர் தோட்டத்தையே கூந்தலாக்குவீர்கள் !

நீங்கள் மிகப் படிக்கத் துடிக்கிறீர்கள் !
ஆனால்---
புத்தகங்கள் தங்களை வாசித்துக்கொண்டே உங்கள் இருக்கைக்கு வர விரும்புகிறீர்கள் !

எனக்குத் தெரியும் --நீங்கள் எழுதுவதில் வல்லவர்கள் என்று !
ஆனால்--
பேனா திறந்துகொண்டும் --
காகிதங்கள் உங்கள் கரங்களை நகர்த்திக் கொண்டும் வரவேண்டும் என்று மிக விரும்புகிறீர்கள் !

உங்களைப் புரிந்ததாற்தான் புத்தகங்களாக நான் உங்கள் முன் விரிகிறேன் ! எழுத்துக்களைப் புஷ்பிக்கிறேன் !

இது எனது ஆக்கிரமிப்பு அல்ல --
இல்லை--வித்தியாசமான படையெடுப்பு !
கஜினி முஹம்மது போல் அடிக்கடி படையெடுத்து நானல்லவா
இதுவரை தோற்றுப் போய் நிற்கிறேன் --

நான் உங்கள் சோமனாதபுரத்துக் கலைச் செல்வங்களைத் தீயிட வரவில்லை --உங்கள் இதயபுரத்து இடுக்கெல்லாம் இனிமை நட்டிட அல்லவா வந்திருந்தேன் ! ஆனால் தோற்றல்லவா புதைந்து விட்டேன் !

நான் மாறிவிட்டேன் --
இனி மகா அலெக்சாண்டர் போல் நீண்ட பெரும் சூறாவளியாய் சூழப் போகிறேன் ! உங்களை அடிமையாக்கப் போகிறேன்--எனது எழுத்துக்களால் !
உங்களைக் கொள்ளையிடப் போகிறேன் --எனது கருத்துக்களால் !

அதே அலெக்சாண்டர் போல் இவனும்
இறுதியில் எதனையும் எடுத்துச் செல்லப் போவதில்லை --

இவனது திறந்த உள்ளங்கைகளில்
உங்கள் இதயங்கள் நடந்த ரேகைச் சுவடுகளை அல்லவா
நீங்கள் கடைசியில் காணப் போகிறீர்கள் !

இவனது படையெடுப்பில் மடிந்தது ஒன்றாக இருந்தாற்போதும் !
அதுதான்--
உங்கள் இனிய சோம்பேறித் தனம்...சரியா !

--------சந்திர கலாதர்
[ 23-11-1991 ]

Thursday, June 9, 2011

WHY HEAP SO MUCH ,MAN ?

என் பழைய எழுத்துக்கள் --

[ இலக்கிய ஊஞ்சல் கையெழுத்துப் பத்திரிக்கையிலிருந்து ]

தான் சேர்த்து வைக்கும் பொருள் எவற்றையும் தான் கொண்டு செல்லப் போவதில்லை என்பதை மனிதன் அறியாமலா இருக்கிறான் ?--
அவனுக்கு அது நன்றாகவே தெரியும் !
தான் சேர்த்து வைப்பதில் முக்காற் பகுதியைத் தான் பயன்படுத்தக் கூடப் போவதில்லை என்பதும் அவன் அறியாததல்ல --

இருந்தாலும் ....பொழுது விடிந்து பொழுது சாய்வதற்குள் என்னென்ன பொருட்களையெல்லாம் தன் வீட்டினுள் குவிக்கிறான் --
எத்தனை எத்தனை மூட்டைகளாக அவற்றினைக் கட்டிப் பரண்மீது அடுக்குகிறான் ! தூசி படிய அனுமதிக்கிறான் !

ஒவ்வொரு மனிதனும் ' தனது தனது ' என்று குவிக்கும் குவியலின் உயரம்தான் எவ்வளவு ! பார்த்தாலே மயக்கம் வராதோ ?
இப்படி ஒவ்வொரு மனிதனும் குவிப்பதை நோக்கினால் --இனிமேல் மனிதன் வாழ்வதற்கு எங்கே இடம் இருக்கப் போகிறது ?
ஒரு மனிதன் வாழ்க்கை நடத்துவதற்கு
இத்தனை பொருட்களா தேவைப் படுகிறது !

இதோ..!
என் முன் உயர்ந்து நிற்கும் என் குவியல் என்னைப் பார்த்துக் கொக்கரிக்கிறது ! " இதோ உங்களையெல்லாம் கொளுத்தி எரியவிடப் போகிறேன் ". எனச் சூளுரைக்கிறேன் ! எதிர்க் கொக்கரிக்கிரேன்.." ஹ் ஹஹா ஹஹாஹ் " !

ஆனால் ,--அதற்குள் -எரிய விடுவதற்குள் ஒவ்வொரு மூட்டையையும் பிரித்துப் பார்த்துத்தான் எரிப்போமே !
எங்கிருந்து அச்சபலம் ? எவர் பேசுவது குரல் எழுப்பாமல்....ரகசியமாக ? -ஒன்றைப் பிரிக்கிறேன் --

அதிலுள்ள ஒவ்வொன்றும்-- ஒவ்வொரு கந்தையும்--ஒவ்வொரு குப்பையும் --முக்கியமாக --அதிமுக்கியமாக -தேடக் கிடைக்கா அறிய பொருளாகி விடுகின்றதே !
கடைசியில் குவியல் முழுவதும் விலைமதிக்க முடியாத செல்வமாகி முடியுதே !

இவை அன்றி என் வாழ்வில்லையோ ?
பிரிக்கப்பட்ட மூட்டைகள் மறுபடி கட்டப்படுகின்றன !
கட்டப்பட்ட மூட்டைகள் பரணுக்குத் தாவுகின்றன !
சேச்சே..! இந்த நிலை மாறாதா ?

உலகமே..! நீ மிகப் பொறுமைசாலி !
ஓ..! உனது குப்பைகள்தானே நாங்கள் !


-----சந்திர கலாதர் --
[29.-10-1991]

THIS IS NOT A POEM NOR A PROSE BUT A NOMAD'S REAL LIFE !

இது கவிதை அல்ல ! உண்மை நிகழ்வு ! நாடோடிகள் வாழ்வில் ..!

30.09.1991 / திங்கள்..காலை 07.00 மணி .

வாயிற் கதவு அருகே , " அம்மா ! " என்ற அழைப்புக் குரலோடு இரும்புக் கதவுகள் மெலிதாக மோதிக் கொள்கின்றன ..வழக்கம்போல் கையிலே தட்டேந்தி வரும் ' மாரியம்மா ' பெண்களா ? அல்லது குறிப்பேடு தாங்கி வரும் கோயில் நிதி திரட்டுவோரா ?--என ஐயங்கள் கிளர்ந்தெழ வாயிலுக்கு வருகிறேன்...வாயில் அருகே ஓர் நடுத்தர வயது ஏழைப் பெண் ..." அய்யா ! ஒருவர் இறந்து விட்டார் !..அவர் பிணத்தை எடுப்பதற்கு ரூ .100 /- கேட்கிறார்கள் ...நான் ஒரு முண்டச்சி ..என்ன செய்வேன் ?..ஆளுக்கொரு ரூபாயோ இரண்டோ கொடுத்தால் உதவியாக இருக்கும் .." எனக் கை ஏந்துகிறார் ..திடுக்கிடுகிறேன் !..அடிவயிற்றில் அதல பாதாளமாய்க் குழி இடுகிறது பரிதாபம் !. ." யார் அம்மா நீங்கள் ? என்ன ஆயிற்று ? "--என்கிறேன் ." அய்யா ! ஒரு இருபத்தைந்து வயது எங்காள் ஒருவர் இறந்து போனார் ..நாங்கள் அதோ அந்த வெட்ட வெளிப் பொட்டலில் ..புளிய மரத்தடியில் ஜீவனம் செய்யும் நாடோடி ஜோசியம் பாக்கறவங்க ...என்னய்யா பண்றது ?..குழி எடுக்க நூறு ரூபாய் கேக்குறாங்க சாமீ ..! ".வேறு ஏதாவது ஏமாற்று வேலையாக இருக்குமோ என்ற சந்தேகமும் எழுகிறது .." அம்மா ! பிணம் எங்கிருக்கு ? " " இதோ பாருங்க..அந்த மரத்தடியிலதான் இருக்குது.." உடனே நெஞ்சே நெகிழ்ந்து போகிறது ..இரு நாட்களாய் எங்கோ கேட்பதுபோல் தோன்றிய மரண வேதனை இரவில் ஓர் ஏழையின் வீட்டில் பதம் பார்த்து விட்டிருக்கிறதே ! வீட்டிற்குள் விரைகிறேன்; ..மனைவியிடம் ஒரு நிமிட ஆலோசனை .." அம்மா ! ஒரு ரூபாய் இரண்டு ரூபாய்தான் கேட்கிறார்கள்... ஏமாற்றில்லை !...ஏழ்மை ! ..பொய்மை இல்லை !....மரணம் கொத்தி விட்டிருக்கிறது ..ஒருத்தியை இரவு அபலை ஆக்கி இருக்கிறது ..சில குழந்தைகள் நள்ளிரவில் நடுத் தெருவில் நிர்க்கதியாய் ...பிணம் மரியாதை செய்யப்பட வேண்டும் ..ஏனெனில் அது ஓர் திக்கற்ற ஏழையின் சடலம் " என்கிறேன் .மனைவி அவசரமாக ஐந்து ரூபாய்களை என்னிடம் திணிக்கிறாள் ..ஓடோடிச் சென்று அப்பெண்ணிடம் கொடுக்கிறேன் ..சிறிய உதவிதான் ..எனினும் சின்ன நிறைவு !...குழந்தைகள் சூழ , " என்னப்பா..? என்னப்பா.? " என விழிகளில் பறக்கின்றன--.ஏழையின் வாழ்வின் அவலத்தை விரிவாக அந்தப் பிஞ்சு நெஞ்சங்களில் விதைத்துக் கருணையை அறுவடை செய்கிறேன்--.கண்கள் அந்தப் பொட்டலையே பார்த்து விறைக்கின்றன--.இனி என்னென்ன சோகங்களோ ? ..வாழ்வே வெட்ட வெளியில் !..இனி அவ் வெட்டவெளியிலும் ஒரு குருட்டு வெளியா ? குழந்தைகளிடம் சொல்கிறேன் .." குழந்தைகளே ! இரவெல்லாம் மின்விசிறி,கொசுவேடர்களிடம் இருந்து உங்களைக் காக்கின்றது--.நல்ல வீட்டின் அணைப்புள் போர்வை ,தலையணை ,மெத்தை இத்யாதிகளுடன் ..பாம்பு,பல்லி,தேள்,விஷ உயிர்களின் நச்சு நாவு கொடுக்குகளுக்கும் அப்பால் நீங்கள் ---.அவர்கள் பரம ஏழைகள்-- ..அவர்கள் இரவில் படுப்பதெல்லாம் மண்வெளியில் கொசுக் கூட்டங்களிடை ...அவற்றின் அரக்கப் பசிக்கிரையாகி .விஷ உயிர்களின் கருணையில்--.பனி யில் ..மழையில் நடுங்கி வாடி ...பார்த்தீர்களா வாழ்வின் அவலங்களை ! ....அவர்கள் இறந்தால் எந்த அரசும் உதவிக்கு ஓடி வருவதில்லை--.எங்களைப் போன்ற அரசு அல்லது தனியார் நிறுவன ஊழியர் இறந்தாலோ குறைந்தது சில ஆயிரங்களாவது உறுதி---இவர்களைப் பார்..பாவம்.புதைப்பதற்குக் கூட முடியாது தவிக்கின்றனர் !..இறந்தவர்க்கு எத்தனை குழந்தைகளோ .? அவர் மனைவியும் குழந்தைகளும் நாளைமுதல் எப்படி வாழப் போகிறார்களோ ..சொல்லுங்கள்..? நாம் உதவ வேண்டும் ஏழைகளுக்கு " என என் சொற்களில் இதயத்தை நடைபோட வைக்கிறேன்---.குழந்தைகள் மென்மையாக ஆமோதிக்கின்றன ! . என் நெஞ்சு ஏனோ இன்னமும் நிறைவாகவில்லை--.நான் அளித்த ஐந்து ரூபாய் போதாது --என் மனைவியுடன் அவர்கள் சோகம் பற்றிப் பேசிய வண்ணமே இருக்கிறேன்--.நான் இன்று அந்தச் சடலத்தை அகற்ற இன்னமும் உடலால் ...பணத்தால் ,உழைப்பால் உதவியாய் நல்கி இருக்கவேண்டும்--.உணவு ஏறவில்லை !..அலுவலகம் செல்லக் கலங்கிய மனத்துடன் பஸ் நிறுத்தம் வந்து சேருகிறேன்-- .சிறிது தொலைவில் மரத்தடியில் சிறு கூட்டம்-- அங்கிருந்து அப்பெண் இன்னொரு ஆணுடன் வருகிறார் ---எனக்கெதிரே ஓர் சேட்டின் அடகுக் கடை ---அப்பெண்ணின் கையில் இரு சிறிய வெண்கலப் பாத்திரங்கள் --.அடகு வைக்கிறார்கள் !.என்ன பணம் கொடுத்திருக்கப் போகிறான் சேட் ?..அய்யோ .! அதை அடகு வைக்காதீர்கள்--..நான் பணம் தருகிறேன் இன்னமும்.!." என என் மனம் உள்ளூரக் கூச்சலிடுகிறது ...பாத்திரங்கள் கைமாறிவிட்டன ..ஒருவேளை அவை இறந்தவர் வீட்டு ஒன்றிரண்டு பாண்டங்களில் ஒன்றோ ? ஐயோ...அப்படியானால் எவ்வளவு நாட்கள்
பைசா பைசாவாக மீதம் பிடித்து வாங்கினார்களோ ? மரணம் அதற்கும் மரணத்தை அளித்து விட்டது ! கிளி ஜோசியத்தில் இவர்கள் இனி என்று மீட்க ?..என்று இனி இதுபோல் வாங்க ? இவர்கள் குழந்தைகள்--என்று இந்தக் காலத்துப் பணம் தின்னிப் பிசாசுகள் வாழும் பள்ளிகளில் படித்துக் கல்வி பெற ? குழந்தைகளே.! உங்களுக்காக என் கண்ணீர் நதிகள் !--எந்த அரசாங்கமும் உங்களைத் தேடி வரப் போவதே இல்லை !--ஊர்வலமும் உற்சவமுமாய் அரசியல்வாதிகள் ஆகிவிட்ட பின்--கோயில்களே திருவிழாக்கள் இல்லாது போயினவோ ? பொய்ப் பட்டமும் , அரணாய்க் காவலும் , கால் பதியா ஓட்டமும், வான்-நிலம் பார்க்காப் பயணங்களும் கொண்ட மந்திரிகள் உங்களை என்று பார்க்கப் போகிறார்கள் ? புலிப்படை,பூனைப்படைகளைத் தாண்டி அவர்கள் பார்வை செல்ல வழி ஏது ?--நெஞ்சிலே துப்பாக்கிக் கவசம்--வலிய துப்பாக்கிக் குண்டே நுழைய முடியாத இவர்கள் நெஞ்சில் எப்படியம்மா கருணை மென்பார்வை வழி கேட்கும் ? உங்களுக்காக எத்தனை ' வித்யாசாகர்கள் ' தோன்ற முடியும் ? வித்யா சாகர்களோ ' லக்ஷ்மிசாகர் 'களாகப் பணம் நிறைந்து காணப்படவில்லையே ! பேருந்து வரப் பார்க்கிறது--அதன் உறுமலும் அருகில் கேட்கிறது--சில நொடிகள்தான் ! பையைத் திறந்து பர்ஸைத் திறந்து ஓர் புதுப் பத்து ரூபாயை எடுக்கிறேன்--அப்பெண்ணிடம் ஓடுகிறேன் ! பஸ் ..அதோ மூலையில் வந்தே விடுகிறது--அப்பெண்ணின் கையில் மற்றோர் எனது பத்து ரூபாயைத் திணிக்கிறேன்--கையிரண்டும் கும்பிட உயர்கிறது ! பஸ் என்னைப் பிய்த்து விரைகிறது ..இனி என்ன..? அலுவலகம்தான் . ஆனால் என்னவோ நெஞ்சில் சற்று நிறைவு !

எனக்கென்னவோ மனிதநேயக் கவிஞன் ஆவதைவிட மனிதாபிமானியாக வாழ்வதே பிடிக்கிறது !
ஆயிரம் மனிதநேயக் கவிதைகளில் உருகி வழிவதைவிட .உடலால் , உழைப்பால் மனிதனாவதையே நான் வெகுவாக வேண்டுகிறேன் !
இறைவா ! எனக்குக் கருணை பொங்கும் இதயமும் வழங்கத் தேவையான பொருளும் மனமும் தா..!
என் கரங்கள் சோகங்களின் நடுவில் அவற்றின் முட்களைச் சற்று முறிப்பதாய்த் துணை செய்யட்டும்


.....சந்திர கலாதர் ...

[.பின்குறிப்பு--இருபது ஆண்டுகளுக்கு முன்னால் 15 ரூபாய் என்பது சற்று மரியாதையான தொகை ஆகும் ] .

Wednesday, June 8, 2011

MY MOTHER

MY MOTHER

Who sat and touched my infant head
When sleeping on my cradle bed
And tears of sweet affection shed?
--My Mother..

சிறு தொட்டில் மஞ்சம் மீதினிலே
மெல்லிய துயில் எனைப் படருகையில்
விழி மூடாது என் அருகமர்ந்து
கனிந்த கண்ணீர் முத்துக்களால்
பாசக் கவிதை புனைந்தது யார்?

--அம்மா..அது நீயன்றோ !

When pain and sickness made me cry
Who gazed upon my heavy eye
And wept for fear that i should die ?
--My Mother..

வலியும் நோவும் கதறி அழவைத்தால்
கனத்துச் சிவந்த என் விழிகளைத்
தன் கனிவுப் பார்வை ஆரத் தழுவிடவும்
முடிவின் முத்தம் இதழ் பதிந்திடுமோ
எனும் பேரச்சம் நெஞ்சைக் கவ்வுகையில்
மழையாய் விழிகள் மாறிவிட
சோக அருவியானது எவ்வுள்ளம் ?

--அம்மா .அது நீ யன்றோ !

Who taught my infant lips to pray
And love god's Holy Book and Day
And walk in wisdom's pleasant way?

--My Mother...

பூவிதழ்கள் இறை பாடிடவும்
தெய்வ மறைகள் தெளிந்து நேசிக்கவும்
அறிவின் சுக வழி நடப்பதற்கு
கைப்பிடித்து எனை அழைத்துச் சென்றது
யார் சொல்லவோ ?

--அம்மா ..அது நீயன்றோ !

And can i ever cease to be
Affectionate and kind to thee
Who want so very kind to me

---My Mother.

பாசம் பொழியும் என் தாயே !
பக்தியும் அன்பும் உன்மீது
பொழிதலை நிறுத்தல்
இமைப் பொழுதாகினும்
எனக்கு இயலுமாமோ ?

Ah,no ! the thought I cannot bear
And if god please my life to spare
I hope I shall reward thy care

--My Mother.

உனை மறத்தல் என்னும் அவ்வெண்ணம்
தாங்காதம்மா என் நெஞ்சம் ;
நெடுநாள் வாழ்வு கடவுள் அருள் செய்யின்
உன் கருணைக் கெல்லாம் என் தொண்டுகளால்
ஈடு செய்ய நம்பிடுவேன் .

When thou art feeble, old and grey
My healthy arm shall be thy stay
And I will soothe thy pains away
--My Mother !

-----Ann Taylor

மூப்பில் தளர்வில்அம்மா நீ நலியுங்கால்
வலிய கரம் நீட்டிடுவேன் ;
ஊன்றுகோல் என்றாகிடுவேன் ;
வாட்டும் வலிதனை விரட்டும் மருந்தாவேன் .

--மொழி மாற்றம்...சந்திர கலாதர்
[09.05..1991 ]

Tuesday, June 7, 2011

PLAY ON YOUR VEENAI , MY DEAR !

என் அன்பே ! உன் வீணையை மீட்டு !

என் அன்பே !
அழகிய வீணையை மென்கரங்களில் ஏந்திடு..
தெய்வீக வீணையின் நுண் நரம்புகள் மீது
உன் தளிர் விரல்களை மென்மையாய் உலவவிடு..
ஓ..என்னே இவ்வினிய மனோகர கீதம் !
என் இமைகள் மென்மையாய்க் கிறங்கி இறங்குகின்றன ..
என் சதை ,எனது என்பும்கூட எல்லாம் மெதுவாய்
வீணையிலிருந்து விரியும் தேவ நாத மருவுதலில் மென்மையுருகின்றன
உன் இசையின் இனிய ஆலிங்கனத்தால் --அல்ல .அல்ல..
மகோன்னத மகிழ்வின் கொடிய வேதனையில் ....
என் மனம் மிகத் துன்புற்றுப் பாம்பென நெளிகிறது .
வார்த்தைகளே ! எங்கே ஒளிந்தீர்கள் ?
என் உணர்வுகள் மொழிப் படகுதனைத் தேடிப் பரிதவிக்கின்றனவே !
உன் வீணா நாதம் என் இதயத்தையே இறுக்குவதோ ?
என் நெஞ்செல்லாம் வேதனை--
என் ஆன்மா இசை வெம்மையில் அருவமாகிறதோ ?
பிரியம் உள்ளவளே !
யாது உந்தன் பாடல் , சொல் ? எது அதன் ராகம் ?
ஒன்றும் புரியாது நிற்கிறேன் .
என் இசை அறிவு ஆழமற்றதம்மா !
மிதமிஞ்சி இசை மது அருந்தி
தன்வயம் இழந்து பலவீனன் ஆகிவிட்டேன் .
ஒரு பைத்தியத்தின் உச்சத்தில் என் மனம் இன்று நடமிடுகிறது ..
நடமிட்டபடியே உன் இசையை --
அது தன் பாதையின் வளைவு சுழிவுகளில் நேர்த்தியாய் ஊர்கையில்
ஏற்ற இறக்கங்களில் அருமையாய் ஏறி வழுக்கிச் செல்கையில் -
விடாது பின் தொடர்கிறது ..
இருப்பினும் இசையின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாது
அப்பாதையில் விழுந்து தடுமாறுகிறது;
இருப்பினும் பெரு மூச்சு உயிர்த்தபடி பாதை தொடர்கிறது ..
அன்பே ! வீணா நாதத்தின் முந்தானை விளிம்பில்
இறுக்க என்னைக் கட்டி விடு .
உனது கானம் --அது செல்லும் உலகமெல்லாம் --
ஏறும் மலை முகடுகளுக்கெல்லாம் -
சறுக்கி வீழும் ரகசிய ஆழங்களுக்கேல்லாம் -
மகிழ்ச்சியாய் நீந்தும் அலைகள் மீதெல்லாம் -
ஆகாய வீதியில் அழகாய்ப் பறக்கும் இடமெல்லாம் --
உல்லாசமாய் நீந்தும் சிற்றோடைகளில் எல்லாம் --
ஆனந்த உவகையில் தாவும் வெள்ளி அருவி மீதெல்லாம்
என்னை இழுத்துச் செல்லட்டும்;
உயர் கம்பத்தின் உச்சியில் விளையாட்டுத்தனம் செய்யும்
உல்லாசக் காற்றுடன் சுருதி தவறாது
ஜதி பிசகாது நடமிடும் பட்டுக் கொடிதனைப்போல்
என் ஆன்மா ஆடித் திரியட்டும்;
அலை புரண்டுவரும் காற்றோடு
அழகாய் விளையாடும் பட்டம் என
உன் தெய்வ இசையில் மயங்கித்
துன்பமிகு இப்புவி இறங்காது
உயர் வானிலேயே மிதந்து திரியட்டும்;
ஓ..என்அன்பே !
வீணை இசையை முறித்து விடாதே ..
அந்நொடியே என் இதயம் சுக்கு நூறாகி விடும் .
மென்தளிர் விரல்கள் நுண் நரம்புகளில்
எப்போதும் நர்த்தனமிடட்டும் ..
உன் இசைநடம் முடிவற்றதாகட்டும் ..
ஓய்வற்றதாய் ,மரணம் அற்றதாய்
ஸ்படிக ரூபமாய் மிளிரட்டும் ..
நரம்புகளை வலிவாக மீட்டு ..
மென்மையாக வருடு ..மெதுவாய் உறவாடு ..
விரைவாய் விளையாடு ..
ஓ.வீணை நரம்புகளின் எல்லைகளிடை
எல்லாவிதமாயும் மீட்டு .
ஓர் நொடியில் ஆயிரம் விந்தைகள் புரி ..
வீணை நரம்புகளின் மேலும் கீழுமென
என் நெஞ்சைத் தாலாட்டு .
உனது ராகம் விரைந்து பாயட்டும் ..
அதன் சுழல்களில் என்னை உருட்டட்டும் .
வெட்கமின்றி என் மனம்
அவ்வலிதனில்அழுது தவிக்க வேண்டும்;
கானகத்துப் புயல்போல் கர்ஜிக்கட்டும் உன் ராகம்..
அல்லது மின்னற்கீற்றுச் சொடுக்குகளாய்
என்னைப் பிய்த்து எறியட்டும்.
இடி முழக்கம்போல் கம்பீரமாய் உருண்டு திரியட்டும் ..
அங்ஙனம் இல்லையேல் ..என் உயிரின் உயிரே !
உன் இசை அமைதியாய் அடக்கமாய் நடை பயிலட்டும் ..
அல்லது வாசத் தென்றலாய்த் தவழட்டும் ..
அல்லது மௌனச் சிற்றலை விரித்து
தவழ்ந்து ஊர்ந்து நழுவிச் செல்லட்டும்
தெய்வீக இசையே !
என்னை ஓர் நொடி இனிமைத் துள்ளலாக்கி
மறுநொடி தவிப்பில் புதைத்து
பேரானந்தத்தில் பறக்கச் செய்து
மறுநொடி துயரத்தில் தள்ளி
ஆகாயத்தில் உயர்த்தி உடன் தரையில் வீசி எறிந்து .
இறுக்க ஆலிங்கனம் செய்து
மறுநொடி இடுப்பொடிய எற்றி
திக்கு முக்காடச் செய்கிறதே !
நிறுத்தி விடாதே !
நரம்போடு விரல்கள் பிரியா இணையாகட்டும் ..
விண்ணில் பறந்து கொண்டிருக்கிறேன் ..
இறக்கைகளில் ரத்தக் காயங்கள் வேண்டாம் ..
என் அன்பே !அவ்விரல்களுக்கு ஓய்வு வேண்டாம்;
வீணையை அவ்வளவு இனிமையாகப் பேச வைக்கும்
அவ்விரல்கள் இமைக்கவும் வேண்டாம் ..
என் ஆன்மா இளகி உருகி
பேரானந்தத்தில் கரைந்து ஒன்றி மறையும்வரை
உன் விரல்கள் ஓய வேண்டாம்
என் அன்பே !


.....சந்திர கலாதர்

Sunday, June 5, 2011

NO TIME HERE FOR WORRIES ...!

கவலைக்கு இங்கே நேரமில்லை ...

வயலினில் முளைத்திடப் பிடுங்கியே எறிவர்

வரப்பினில் வளர்ந்தால் மிதித்துத் துவைப்பர்

அகன்வெளி தழைத்திடில் ஆடுமாடு அழிக்கும்

பூங்காவில் எழுந்தால் படுத்துப் புரள்வர்

பலகோடிக் கவலைகள் பசும்புற்கள் வாழ்விலே--

வாழ்வோ சிறுபோழ்து மறப்போம் அவையெல்லாம் !

குலவிடும் காற்றோடு இன்நகை பகிர்வோம் !

இதமான அணைப்பில் இனிக்கச் சிரிப்போம் !

காற்றோடு இணைந்து காதலில் ஆடுவோம் !

காலைச் சுடரில் கனகங்கள் பெறுவோம் !

நிலவின் குளிர்வில் முத்துக்கள் அணிவோம் !

சாவின் விளிம்பில் சாகசங்கள் செய்வோம் !

கோலங்கள் புரிந்தே நழுவுது நற்காலம் --

தென்றலின் தழுவலில் இலைமங்கையர் நடனம் --

ஆடவும் பாடவும் சிரிப்பினில் வாழ்வை

முடித்திட நாட்டமும் மானிட விரும்பின்

நாடியே அழைப்போம் ஓடியே வருவாய் !

கவலையைக் கதைப்பின் யாமதைச் சகியோம் --

கவலைகள் கவலைகள் நாளெல்லாம் கவலைகள் !

என்றுதான் வாழ்வது ? சற்று நீ சிந்தி--

சிரிப்போடு சாவினை ஏற்றிடு மனிதா !

தயக்கங்கள் தழைப்பின் இருகாற் பாய்ச்சலில்

இங்கிருந்து அகன்று துயர்வழிச் சேர்வாய் !

விதியிடும் வீதியில் கலங்கிய கண்களும்

விம்மிடும் நெஞ்சுமாய்த் தளர்நடை பயில்வாய்

குழுமியே நிற்கும் உன்மனை நோக்கியே !

அதோ பார் .!

சூரியதேவன் கட்டித்தழுவ கோடித் தொலைவை

நொடிப் பொழுதினில் கடந்து வருகின்றான் !

காற்றுத் தேவன் காதலாகிக் கடுகியே வருகின்றான் !

நேரம் இனி உரைகளுக்கு இல்லை !

லாலல் லாலல் லாலல் லாலல் லாலல் லாலல்லா..!


------------சந்திர கலாதர்

Saturday, June 4, 2011

TALKING TO MYSELF !

[ இலக்கிய ஊஞ்சல் என்ற கையெழுத்துப் பத்திரிக்கையை நான் பொறியாளராகப் பணி புரிகையில் நடத்தி வந்தேன்...அப்போது பலர் திறமை இருந்தும் வாய்ப்புத் தந்தும் ,நினைவூட்டியும் சோம்பேறித் தனத்தால் நாள் கடத்தியபோது எழுந்த எழுத்துகள் இவை..! ]

திறமைகள் சிறந்தும் ஆக்கங்களில் தேக்கம் --
கேட்டால் சொல்லில் மறுப்பே இல்லை...
செயலில்...வெறும் வட்டம் !
எத்தனை முறை சொல்வது ?
எத்தனைமுறை தூண்டுவது ?
நாவே நலிந்து தேய்ந்திடுமோ ?
இனி..
உங்களைக் கெஞ்சிப் பயனில்லை..
உங்களுக்கு எல்லாமே தொடுவானந்தான் !
தொடத்தான் மாட்டீர்கள் ..!
நாளையை நாவிலே சுமந்தே அலைவீர்கள் ..!
வேலை எனக் கதைப்பதே உங்கள் வீண்வேலை .!
சரி..
நீங்கள் எழுதாது ஒளியுங்கள்..!
எழுதுவதையாவது விழி வீச்சில் வளைப்பீரோ ?

எழுதும்போது ஆபரணங்கள் அணிந்து ,
என்னையே மறைத்துக் கொண்டு நான் எழுத இசையேன் ...
நான் நானாக , நெஞ்சோடு நாவு கோர்த்தே ..பிணைத்தே
படைக்க விரும்புகிறேன் .
நான் அழுகிறேன் ...
அழுகை என்னை அமிழ்த்தும் வேளையில் !
சிரிக்கிறேன் ...
நெஞ்சு இலேசாகி இறக்கைகள் காணும்போது..!
நான் என்ன புத்தனா ? போதனைகள் புரிய..!
இத்தனை அறிவுரைகளால் உலகம் நிரம்பி வழிந்தும்
திருந்தியவர் எத்தனை பேர் ?
கசடைக் களைந்தவர் எத்தனை பேர்.?
என்னால் கடைப்பிடிக்க முடியா ஒன்றைப் போதிக்கவும் முடியாது...
அது அதர்மம்...அறமன்று ..!
என் எழுத்துக்களே !
போர்வையை அகற்றி நெஞ்சில் நனைந்து வாருங்கள் !
போலிகளைக் காவு கொடுங்கள் !

இயற்கை வருணனைகளில் என்னை இழக்கிறேன் !
இயற்கை என் எழுத்துக்களை இயற்கையாக ஆக்குவதால் ...
இயற்கை...
என் கைகொண்டு தன்னை எழுதுவதால் பெருமை கொள்கிறேன் ..!

மனித நேயம் பற்றி எழுதுவது தானே ..? என்பதாய்
உங்கள் தாழ் பார்வை
என்னைத் தட்டிச் செல்வதை உணர்கிறேன் தப்பாது !
அங்கேதான் தவறு உள்ளது..
எழுத்துக்களை வைத்தா
மனித நேயத்தை அளந்து பார்க்கிறீர்கள் ?
அப்படியாயின் எழுதுகோல் பிடித்து
ஏடுநடை பயில்பவன் எல்லாமே ...
ஒலிபெருக்கி பிடித்து ,மேடை ஏறி அரற்றுபவன் எல்லாமே
மனித நேயர்களே !
மனித நேயத்தை ஒருவனின் தனிமையில் ...
அவனது தன் வாழ்வில் ..
அவனது வீட்டில் முடிவு செய்யுங்கள் என
நான் உரக்கக் கூவுகின்றேன் !
மனித நேயப் பொய்யர்களை ஒட்டுமொத்தமாக நான் அறிவேன் !

என் மனித மாண்புகள் அடக்கமாய் ..
அதிமௌனமாய்ப் பிறர் நெஞ்சில் புஷ்ப்பிக்கட்டும் !

இறைவா .!
நான் நானாகவே இருக்கட்டும் !
எனக்கு ஊருக்காக அரிதாரங்கள் வேண்டாம் !

மேனாட்டில் இயற்கையைச் சிறப்பாக
ஓர் கவிஞன் வடிவமைத்தால்
அவன் பெருமை அடைகிறான் .
இயற்கைக் கவிஞன் எனப் பட்டம் பெறுகிறான்.
இங்கேயோ நேர் எதிர் !
இன்னமும் வளரவில்லை எனக் குட்டப் படுகிறான் ..
வோர்ட்ஸ்வொர்த் ,ஷெல்லி இவர்களைப் பெருமையாகப் பாராட்டுகிறார்கள் ..
நம் நாட்டில் இயற்கையையே நுகர்ந்து நுகர்ந்து
மையல் கொண்டு ஒருவன் எழுதினால்
அவனைப் புறம் தள்ளி விடுகிறார்கள் !

எல்லோரும் ஓர் மாதிரியே இருப்பின் ..
எல்லோரும் ஓர் மொழியே பேசினால் ...
ஓர் தொழிலே கொண்டால் .
உலகிற் சுவையேது ? உய்வேது ?
தூற்றுபவர்களே !
டாட்டா...டாட்டா ! வருகிறேன் !
செல்கிறேன் என் வழி !

என்றோ ஓர் நாள் ..
எங்கோ ஓர் உயிர்
என்னில் தன்னையும் காணும் எனும்
மாறாத நம்பிக்கை என்னை நகர்த்தட்டும் ...!

-----சந்திர கலாதர்
[ ஏப்ரல் 1991 ]